மைத்திரியை வேட்பாளராக அறிவிக்க மகிந்த ‘பச்சைக்கொடி’?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு கட்சிகளும் ஒன்றிணையாவிட்டால், அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவது கடினம் என்பது தனக்கு நன்றாக தெரியும் என இந்த சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச, கூறியிருக்கிறார்.
எனவே, இரு கட்சிகளின் ஒற்றுமைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு கட்சிகளின் ஒற்றுமைக்காக, இரு கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வேறொரு வேட்பாளரைப் பரிசீலிப்பதற்கும் கூட தான் தயாராக இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பசில் ராஜபக்ச தவறியுள்ளதால், மகிந்த ராஜபக்ச மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயுள்ளதாகவும், இதனால், எப்படியாவது சிறிலங்கா அதிபரின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் கூறுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிபர் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.