அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கன்பெரா போர்க்கப்பல் கொழும்பு வருகை
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இது சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள நான்காவது அமெரிக்க கடலோரப் போர்க் கப்பலாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கடல்சார் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இதன் வருகை அமைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கொமாண்டர் ஜேம்ஸ் மக்லாலின் தலைமையிலான, யுஎஸ்எஸ் கன்பெரா போர்க்கப்பல், எரிபொருள் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொள்வதற்காக கொழும்பில் குறுகிய காலம் தரித்து நிற்கும்.
யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) , கடலோரச் சூழல்களில் செயல்படுவதற்கும், முன்னணி இருப்பு, கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கா வடிவமைக்கப்பட்ட ஒரு இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலாகும்.
2023 ஜூலையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இந்தக் கப்பல், இந்தோ-பசுபிக் முழுவதும் திறமையான மற்றும் சுறுசுறுப்பான இருப்பைப் பேணுவதில் அமெரிக்க கடற்படையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்தத் துறைமுக வருகையானது, அமெரிக்க மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவுகளையும், இருதரப்பு உறவை வரையறுக்கும் நெருங்கிய ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி, உறுதித்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் சிறிலங்காவை ஒரு முக்கிய பங்காளியாக அமெரிக்கா தொடர்ந்து கருதி வருகிறது என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

