‘மொட்டு வெற்றி பெறுவது கடினம்’ – மகிந்தவின் முன்னாள் ஆலோசகர்
பொதுஜன பெரமுனவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களின் நோக்கங்களையும், வேறு எவரையும் விட, தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாக, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகார ஆலோசகராகவும் பணியாற்றிய சஜின் வாஸ் குணவர்தன நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர், “ ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான ஆற்றலைக் கொண்டவை.
பொதுஜன பெரமுன, குடும்ப அரசியலில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நன்கு தொடர்பில் இருந்தவன் என்ற வகையில், அவர்களையும், அவர்களின் நோக்கங்களும் வேறு எவரையும் விட நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.
நாட்டின் இனப்பரம்பலின் படி, பொதுஜன பெரமுன தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல.பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடந்தகால அரசியல் தவறுகளை சரிசெய்யவில்லை.
நாட்டின் இன அமைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளாத வரை, அவர்களால் தேர்தலில் வெற்றிபெற முடியாது.
வரும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சவால் விடுவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், பொதுஜன பெரமுன கைகோர்க்க வேண்டியது அவசியம்.” என்றும் அவர் கூறினார்.