வடமராட்சி களப்பில் மழைநீரை தேக்கும் பாரிய திட்டம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காக, வடமராட்சி களப்பில், மழைநீரைத் தேக்கி வைத்து விநியோகிக்கும் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமராட்சி – கப்பூது, அந்தணன்திடல் பகுதியில், இந்த திட்டத்துக்கான பணிகளை தொடக்கி வைக்கும், நினைவுக்கல்லை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
200 கோடி ரூபா செலவில் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படவுள்ளது.
வடமராட்சி கிழக்கில் இருந்து தொண்டைமானாறு வரை பெரும் பரப்பில் விரிந்துள்ள வடமராட்சி களப்பு பகுதியில், மழைநீரைத் தேக்கி வைத்து, யாழ். குடாநாட்டுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
1012 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய யாழ். குடாநாட்டில், நன்னீர் ஆறுகளோ, பாரிய குளங்களோ இல்லாத நிலையில், குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.
யாழ். குடாநாட்டில் ஆண்டுக்கு 1250 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகின்ற போதும், அதன் மூலம் கிடைக்கின்ற, 9 மில்லியன் கனமீற்றர் நீர் வீணாகா கடலுக்குள் சென்றடைகிறது. எனினும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஆண்டுக்கு 18.28 கன மீற்றர் குடிநீரே தேவைப்படுகிறது.
எனவே, கடலுக்குள் வீணாக கலக்கும், மழைநீரை வடமராட்சி களப்பில் சேகரித்து, குடாநாடு முழுவதற்கும் விநியோகம் செய்யும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, செயற்பாடுக்கு வரும் போது, இலங்கையில் மழைநீரைத் தேக்கி வைத்து குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்தும் பாரிய திட்டமாக அமையவுள்ளது.