ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – சஜித்
ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வே தனது கொள்கையாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கூறும் சஜித் பிரேமதாச, நேற்று கொழும்பில், “புதிய சிறிலங்காவுக்கான புதிய ஊடகங்கள்“ என்ற தலைப்பில், நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தினால், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகபட்ச அதிகாரபகிர்வு என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அந்த கொள்கை இன்னமும் நீடிக்கிறது.
ஒன்றுபட்ட சிறிலங்காவை உறுதி செய்வதற்கு, இனவெறி அகற்றப்பட வேண்டும்.
நாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என்பதால் சிறுபான்மையினர் என்ற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை.
சிலர் அதிருப்தி கொண்டிருந்தால், அந்த குறைகளை ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தீர்க்க வேண்டும்.
ஒற்றையாட்சி சிறிலங்கா என்பது, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.