வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை 30ஆம் நாள் விசாரிக்கக் கோரி சட்டமா அதிபர் மனு
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் டிசெம்பர் 5ஆம் நாள் வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி சட்டமா அதிபர் தரப்பில் நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், வரும் டிசெம்பர் 4ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த மனுக்களை, முன்கூட்டியே வரும் 30 ஆம் நாள் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சட்டமா அதிபர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.