சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு
அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகிய, சிறிலங்கா ரூபாயின் மதிப்பு சரிந்ததன் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் சேவைக்காகச் செலவிடப்பட்ட கூடுதல் தொகை குறித்து பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சிறிலங்கா நிதி அமைச்சின் பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் உதேனி திலகரத்ன,
“48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ. 20 என்ற நாணய மாற்று விகித வேறுபாட்டுடன், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரைத் திருப்பிச் செலுத்தியுள்ளோம் என்ற அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2025-ஆம் ஆண்டில் ரூபா மதிப்பு வீழ்ச்சியினால், 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவினம் ஏற்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் சேவைக்காகத் தேவைப்படும் கூடுதல் 600 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து ஹர்ஷ டி சில்வாவும் கேள்விகளை எழுப்பினார்.
இது குறித்த விரிவான அறிக்கையை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
