மேலும்

வடக்கு, கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கே நாளை தேர்தல் அறிவிப்பு

elections_secretariatவடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறிவிப்பே நாளை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையினால், 203 உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள, 133 சபைகளிலும், 40 உள்ளூராட்சி சபைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பும் திருத்தப்பட வேண்டியுள்ளது.

ஏனைய 93 உள்ளூராட்சி சபைகளுக்குமே நாளை வேட்புமனுக்களை கோரும் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இவ்வாறு நாளை வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள 93 உள்ளூராட்சி சபைகளில், வடக்கு, கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளன.

வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மாத்திரம், நாளை வேட்புமனுக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படும்.

கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் நகரசபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, மண்முனை பிரதேச சபை ஆகியவற்றுக்கு மாத்திரம், தேர்தல்களை நடத்தக் கூடிய நிலை உள்ளது.

அதேவேளை, 40 உள்ளூராட்சி சபைகள் தொடர்பான, வர்த்தமானியில் திருத்தம் செய்யும் அறிவித்தல் வெளியிடப்பட்டாலும் கூட, வடக்கில்  இரண்டு சபைகளுக்கு மாத்திரம் தேர்தலை நடத்தப்பட முடியும்.

யாழ். மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களையே நடத்த முடியும் என்றும் அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *