மத்திய வங்கி பிணை முறி மோசடி – ஆணைக்குழு முன் ஒரு மணிநேரம் விளக்கமளித்தார் ரணில்
சிறிலங்கா மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார்.
இன்று காலை ஆணைக்குழு முன்பாக முன்னிலையான சிறிலங்கா பிரதமர், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுமார் ஒரு மணிநேரம் பதிலளித்தார்.
அவருடன், ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு முன்னிலையாகியிருந்தனர்.
ஆணைக்குழு முன்பாக விளக்கமளித்து விட்டு வெளியே வந்த ரணில் விக்கிரமசிங்க, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது,
“மறைப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆணைக்குழுவிடம் எல்லா விடயங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
பாதையில்சில தவறுகள் இருந்தாலும், நல்லாட்சி தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வரலாற்றில் பிரதமர் பதவியில் உள்ள ஒருவர், இதுபோன்ற ஆணைக்குழு முன்பாக விளக்கம் அளித்திருப்பது முதல்முறையாகும்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழு முன்பாக தாம், முன்னிலையாகி விளக்கமளிக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.