தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையம் – கொழும்பு மாநாட்டில் உருவாக்கப்படவுள்ளது
தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்குவதற்கான மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டம் வரும் 23ஆம் நாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
வரும் 23ஆம், 24ஆம் நாள்களில் இந்தக் கூட்டம், கொழும்பில் உள்ள சினமன் கார்டன் விடுதியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சும், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா பணியகத்தின், தெற்காசியப் பிராந்திய பணியகமும், இணைந்து இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்துள்ளன.
குற்றவியல் புலனாய்வு மற்றும், நாடுகடந்த குற்றங்கள் தொடர்பாக, தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையிலான, தெற்காசியப் பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரா்தியத்தில் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான, பிராந்திய நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற ஐ.நாவின் வலியுறுத்தலின் பேரில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளின், உள்நாட்டு விவகார அமைச்சுக்களின் செயலர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் 40 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.