மேலும்

பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் – சரத் பொன்சேகா

sarath fonsekaவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்,  2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“பிரபாகரன் ஒருவர் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உருவாகினார்.

பிரபாகரன் போர்க்களத்தில் பலமாகும் போது நாமும் பலமாகினோம்.

பிரபாகரன் போரை ஆரம்பிக்கும் போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். தற்போதுள்ள பலமான இராணுவம் அப்போது இருந்திருந்தால் எம்மால் இரு ஆண்டுகளில் போரை முடித்திருக்க முடிந்திருக்கும்.

எனவே, போர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவம், 67 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. இன்னமும், இராணுவத்துக்கு என்று, ஒரு தேசிய மூலோபாய பாதுகாப்புத் திட்டம் கிடையாது.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புச்செலவினம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் தரம் முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

எல்லா பாதுகாப்பு படைகளும், காவல்துறை, சிவில் பாதுகாப்பு படையினரும், போரின் போது  தியாகங்களைச் செய்துள்ளனர்.

அவர்கள் போரில் வெற்றி பெற்றிருந்தாலும், இன்னமும், ஒரு முறையான தேசிய பாதுகாப்பு மூலோபாயத் திட்டத்தை கொண்டிருக்கவில்லை.

போரின் போது என்றாலும், அமைதியின் போது என்றாலும், உலகில் எந்த நாட்டிலும், இராணுவத்தினரின் நிலை உயர்வானதாக இருக்க வேண்டும். பாதுகாப்புப் படைகளுக்கு அந்த நிலையை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு படையினருக்குள்ள பிரதான பொறுப்பு அரசியலமைப்பினை பாதுகாப்பதாகும். அவர்கள் அதற்கு முன்னின்று செயற்படுவர்.

இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நாட்டுக்குள் பிரச்சினைகள் வரலாம். எனவே தற்போது படையினருக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.

இராணுவத் தளபதி பதவிக்கு  முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அவசியம். ஒரு முறை இருந்தால் போதும் என்பவர்களை நியமிக்கக் கூடாது.

பாதுகாப்பு செயலாளராக சிவில் நபர் இருக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றை உருவாக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முன்னைய ஆட்சியில், கடற்படையின் பலத்தை அவன்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கினர். ரக்னலங்கா போன்ற நிறுவனத்தினால் அப்போதைய பாதுகாப்பு செயலர் வியாபாரம் செய்து ஊழல் செய்தார்.

இதுபோன்ற அனைத்து குற்றங்களுக்கும்  தண்டனை வழங்க வேண்டும். குடும்ப அரசியல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இராணுவ வீரர்கள் என்ற வகையில் எம்மால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது.  எனினும் அமெரிக்க இராணுவத் தளபதி இங்கு நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதம அதிதியாக வருகின்றார்.

இதனை இப்படியே விட்டு சும்மா இருக்க முடியாது. இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்டாள்த்தனமாக பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

தற்போது வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றப் போவதாக கூறுகின்றனர்.  வடக்கு, கிழக்கு, தெற்கிலும் இராணுவம் இருக்க வேண்டியது அவசியம்.

எங்கு இராணுவம் இருக்க வேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை பலவீனப்படுத்த நாம் முனையவில்லை. நாடுமுழுவதும்  இராணுவ முகாம்கள் இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *