ஹெய்டிக்கு 1,132 சிறிலங்கா படையினரை வழியனுப்பினார் அனுர
சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 1,132 பேர் கொண்ட படைப்பிரிவு ஒன்று, ஹெய்டியில் ஐ.நாவின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படவுள்ளது.
இந்தப் படைப்பிரிவில், பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 சிறிலங்கா இராணுவத்தினரும், 189 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும், மற்றும் முதன்முறையாக, கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் வெடிபொருட்களை அகற்றுவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவத்தினரும், இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படையணிக்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட யூனி பவல் கவச வாகனங்களும், அதிபர் பாதுகாப்புப் பிரிவால் வழங்கப்பட்ட இரண்டு சிறப்பு குண்டு துளைக்காத வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
பனாகொடவில் உள்ள சிறிலங்கா காலாட்படை படைப்பிரிவு மையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு, ஹெய்டிக்குப் புறப்படும் சிறிலங்கா படைகளுக்குத் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இத்தகைய வழியனுப்பு விழாவில் சிறிலங்கா அதிபர் ஒருவர் நேரில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஹெய்டியில் அமைதியையும் உறுதித்தன்மையையும் மீட்டெடுப்பதற்கான அனைத்துலக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், கும்பல் அடக்கும் படையின் ஒரு பகுதியாக, இந்தப் படைப்பிரிவு ஓகஸ்ட் மாதம் அனுப்பப்படவுள்ளது.




