போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்- லக்ஸ்மன் கிரியெல்ல
சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சரியான இழப்புகள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர்,
“இனப்பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறியதால் தான், நாட்டின் பொருளாதாரத்துக்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்பட்டது.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இனப்பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டும்.
சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் 400 பில்லியன் டொலர் வரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் பாதி இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.
அவ்வாறாயின் விடுதலைப் புலிகளுக்கு 200 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
எனினும், போரினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு சரியாக மதிப்பிடப்படவில்லை.
இந்த மதிப்பீட்டைச் செய்யுமாறு நாடாளுமன்ற ஆய்வுப் பிரிவை கேட்டுள்ளேன். அவர்கள் அதனை மதிப்பீடு செய்வார்கள்.
மகிந்த ராஜபக்சவினால் போரை முடிவுக்குக் கொண்டு வர முடிந்த போதிலும், நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவோ, முதலீடுகளைக் கொண்டு வந்து தொழில்களை ஆரம்பிக்கவோ முடியவில்லை.
ஆனால் அவர் பெருமளவு கடன்களைப் பெற்றிருக்கிறார். அரசாங்கம் இப்போது, 7000 பில்லியன் ரூபா கடன்பொறிக்குள் சிக்கியுள்ளது.
இந்த நிலைமைக்கு இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களே பொறுப்பு.
பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், இந்த அரசாங்கத்தினால் அரசாங்க வருமானத்தை அதிகரிக்க முடிந்துள்ளது. 2014இல் 11.5 வீதமாக இருந்த அரசாங்க வருமானம், 2016இல் 14.2 வீதமாக அதிகரித்துள்ளது.
2012 / 13 இல் 6.7 வீதமாக இருந்த வறுமை நிலை 2016இல் 4.1 வீதமாக குறைந்திருக்கிறது. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.