சினோபெக்கின் 3.7 பில்லியன் டொலர் முதலீடு குறித்து 2 மாதங்களில் முடிவு
அம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்டுள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் குறித்து முடிவெடுக்க அரசாங்கத்திற்கு குறைந்தது இன்னும் ஓரிரு மாதங்கள் தேவை என்று, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் சினோபெக் நிறுவனத்திற்கும் இடையே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. இறுதி முடிவு இன்னும் இரண்டு மாதங்களில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடன்பாட்டின்படி அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக, உற்பத்தியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பதுடன், 20 சதவீதம் மட்டுமே உள்ளூர் சந்தையில் விற்கப்பட வேண்டும் .
இந்த நிலையில், உள்ளூர் சந்தையில் அதிகளவு விற்பனைக்கு சினோபெக் நிறுவனம் அனுமதி கோரியதா, அரசாங்கம் அதை நிராகரித்ததா என் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கலந்துரையாடிலில் உள்ள எந்தவொரு விடயத்தையும் தற்போது வெளிப்படுத்த முடியாது என, அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு ஜனவரியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, 3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதி சார்ந்த எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
சினோபெக் நிறுவனம் தற்போது சிறிலங்காவில் 12 சதவீத சந்தைப் பங்குடன் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
