சீன கடற்படைக் கப்பல் புறப்பட்டது – அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன கடற்படைக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை விட்டுப் பறப்பட்டுச் சென்ற அதேவேளை அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
கடந்த 10ஆம் நாள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Ji Guang ஐந்து நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
அதேவேளை, அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்ஏஎஸ் நியூகாசில் நான்கு நாட்கள் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
138.1 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பலில் 184 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து அவுஸ்ரேலிய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
வரும் 17ஆம் நாள் அவவுஸ்ரேலிய போர்க்கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.