உள்ளூராட்சி சபைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய வர்த்தமானி வெளியானது
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்காணி கல்பாணி லியனதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை உள்ளடக்கிய, வர்த்தமானி அறிவிப்பு முதலில் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்த வர்த்தமானி அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும்.
இதுசம்பந்தமாக, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரால், கடந்த நொவம்பர் 1ஆம் நாள் வெளியிடப்பட்ட வர்த்தமானியைப் பயன்படுத்தி இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதன் படி, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,486 இல் இருந்து, 8,356 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 336 ஆக இருந்த மொத்த உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கையும் 341 ஆக அதிகரித்துள்ளது.