உடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு
கடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்காக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
“அம்பத்தளை, நாகலகம் வீதி அணைக்கட்டுகள் ஆபத்தில் இருக்கின்றன. கொழும்பு மற்றும் களனிய பகுதிகளை இந்த இரண்டு அணைக்கட்டுகளும் தான் பாதுகாக்கின்றன. இவை பிரித்தானியர்களால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை.
இந்த இரண்டு அணைக்கட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவை பாதுகாப்பான நிலையில் இல்லை.
இன்னொரு கடுமையான மழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், தப்பிக்க முடியாது.
நாடாளுமன்றம் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்பதை சபாநாயகருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். மிக கடுமையான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் மூழ்கிப் போய்விடும்” என்றும் அவர் தெரிவித்தார்.