ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது – ராஜித சேனாரத்ன
மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுடன் சிறிலங்கா அரசாங்கம் முரண்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தொடர்பாக, சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,
‘போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, ஐ.நாவுடன் முரண்பட்ட முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கையை, தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிக்காது.
ஐ.நாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாக, முன்னைய அரசாங்கம் எவ்வாறு அனைத்துலக சமூகத்தினால் ஓரம்கட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
அதே கொள்கையை நாம் கடைப்பிடிக்கமாட்டோம். ஐ.நாவுடன் இராஜதந்திர முறையில் செயற்படுவதே அரசாங்கத்தின் கொள்கையே தவிர, முரண்படுவதல்ல.
சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுடன் ஒத்துழைக்காது என்று ஐ.நா அறிக்கையாளர் எமர்சன் நிலைமைகளைத் தவறாகப் புரிந்து கொண்டார்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.