அம்பாறையில் இந்திய- சிறிலங்கா விமானப்படையினர் கூட்டுப் பயிற்சி
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, இந்திய விமானப்படையினர் வான்வழி தரையிறக்கப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூலை 9ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றன.
சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, 65 இந்திய விமானப்படையினர், இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஒன்றில் சிறிலங்கா வந்திருந்தனர்.
இவர்கள் அம்பாறையில் சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து, வான்வழித் தரையிறக்கம் உள்ளிட்ட கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்திய விமானப்படை அணி, சிறிலங்காவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு, நேற்றுமுன்தினம் திருவனந்தபுரத்துக்கு திரும்பியுள்ளது.