தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட விடமாட்டேன் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
தேசிய பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வேன் என்றும், தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்த, ராமன்ன பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு அதிகாரி என்ற வகையில், எந்தவொரு பாதுகாப்புப் படையினரும், அவசியமின்றிக் கைது செய்யப்படமாட்டார்கள் என்று உறுதியளிக்கிறேன்.
நாட்டின் முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் கௌரவத்தையும், மதிப்பையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு. இவர்களின் மரியாதையைக் குறைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்.
எந்தச் சூழ்நிலையிலும், பிடியாணை இல்லாத கைதுகள் இடம்பெறாது.
ஊழல், குற்றங்கள் குறித்த அவசியமான விசாரணைகள் மாத்திரமே நடத்தப்படுகின்றன. அவசியமற்ற கைதுகள் இடம்பெறாது.
எதிர்காலத்தில், சட்டமா அதிபரால் அல்லது தொடர்புடைய உயர் அதிகாரிகளால், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல், எந்தக் கைதுகளும் மேற்கொள்ளப்படாது.
முன்மொழியப்பட்டுள்ள காணாமல் போதல்களை தடுக்கும் சட்டமூலம், போர் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் எந்த அச்சமோ, சந்தேகமோ இன்றி வாழ முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.