போர்க்குற்ற வழக்குகளில் அனுபவமுள்ள கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமனம்
மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளதையடுத்தே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார விஞ்ஞான பட்டம் பெற்ற கபில வைத்தியரத்ன, சட்டகல்லூரியிலும் பட்டம் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள் தொடர்பான பாடத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
பிஜியில், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கபில வைத்தியரத்ன, 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரை, முன்னாள் யூகோஸ்லாவியா தொடர்பான ஐ.நாவின் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில், சட்டவாளராகவும் பணியாற்றியுள்ளார்.