வெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அங்குள் ஜே விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித ராஜபக்சவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
மகிந்த ராஜபக்சவுடன், நாமல் ராஜபக்ச, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும் யோசித ராஜபக்சவைப் பார்வையிடச் சென்றிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில், விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையயிட அனுமதி வழங்கப்படுவதில்லை.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் அனுமதியின்றி எந்த நாளும் எந்த நேரத்திலும் சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கு சிறப்புரிமை இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதனைப் பயன்படுத்தியே இன்று தனது மகனை மகிந்த ராஜபக்ச பார்வையிட்டுள்ளார்.