மேலும்

அனைத்து தரப்புகளினதும் கருத்துகளை உள்வாங்கி தீர்வுத் திட்டத்தை தயாரிக்க கூட்டமைப்பு முடிவு

sumanthiranஅனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்களை உள்வாங்கியே, அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பது என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நேற்று நடந்த, கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இந்தக் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன் அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் தீர்மானங்கள் அது தொடர்பான காரணங்கள் குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

காலை 10.30 மணிக்குத் தொடங்கி மாலை 7 மணிவரை நீடித்த இந்தக் கூட்டத்தில், பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.

இறுதியில், தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தரப்புக்களின் கருத்துக்களையும் பெற்று அரசியல் தீர்வு திட்டத்தை தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தக் கூட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின்  ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“இன்றைய கூட்டத்தில் குறிப்பாக புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன, என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வெவ்வேறு தளங்களில் எமது நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நாங்கள் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மூலம் எமது மக்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்கு மக்கள் எமக்கு முழுமையாக ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

அந்த வகையில் மக்களின் முழுமையான விருப்பத்திற்கு அமைவாக ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து அதனை அரசாங்கதிற்கு சமர்ப்பிப்போம்.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற்று வருகிறது. இதில் முதன் முறையாக தமிழ் மக்களின் பங்களிப்பு இருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.

ஆகையினால் எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறதக்கதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இயன்றதை செய்வோமென அனைத்து உறுப்பினர்களும் தீர்மானித்திருக்கிறோம்.

அரசியல் தீர்வு திட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தரப்புக்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வோம்.

இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சியை வலியுறுத்தினாலும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

எனவே எங்களுடைய மக்களின் தீர்ப்புக்கு அமைவாகவே நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *