இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கிடையில் புதுடெல்லியில் தொடங்கியது கலந்துரையாடல்
இந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஐந்தாவது கலந்துரையாடல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்திய சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்படும் இந்தக் கலந்துரையாடலில், நிர்வாகம், விநியோகம், பயிற்சி, விளையாட்டு தொடர்பான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கும் சிறிலங்கா இராணுவத் தரப்புக் குழுவுக்கு, இராணுவச் செயலராக இருந்து அண்மையில் யாழ். படைகளின் தலைமையகத் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமை தாங்குகிறார்.
அத்துடன், மேஜர் ஜெனரல் ஜனக வல்கம, பிரிகேடியர்களான ராஜகுரு, ஜெயசேகர, ரால்ப் நுகேரா, வாதுகே, மற்றும் கேணல் குலதுங்க, ஆகியோரும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவில், இராணுவப் பயிற்சி பணிப்பாளர் லெப்.ஜெனரல் ஏ.எல்.சவான் மற்றும், இராணுவ செயலாளர் லெப்.ஜெனரல் அமர்ஜீத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.