கப்பல் போக்குவரத்து வழி மீது அமெரிக்கா அக்கறை – சிறிலங்கா கடற்படையுடன் ஆலோசனை
இந்தியப் பெருங்கடல் பகுதியின் முக்கியத்துவம்மிக்க வணிக மற்றும் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் சிறிலங்காவுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், நேரடியாக ஆராய்ந்துள்ளார்.
காலியில் உள்ள சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்துக்கு கடந்த 14ஆம் நாள் சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர், சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களையும் பார்வையிட்டார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்து வழியை பாதுகாப்பதில் சிறிலங்கா கடற்படையின் உதவியை எவ்வாறு பெறலாம் என்பது குறித்தும், அவர் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், காலி துறைமுகத்தையும் படகில் சென்று அமெரிக்கத் தூதுவர் பார்வையிட்டுள்ளார்.