சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்தினம் புதுடெல்லி வந்திருந்த அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விப்ட், நேற்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில், இந்தியப் பெருங்கடலில், சீனாவின் முன்னகர்வுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்த்தல்களின் நோக்கம் குறித்தும், அட்மிரல் ஸ்கொட் ஸ்விப்ட் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அத்துடன் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையில் அணுசக்தி நீர்மூழ்கிகளை சீனா பயன்படுத்துவதாக கூறுவது குறித்தும் அவர் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
மேலும், சிறிலங்கா, பாகிஸ்தான், டிஜிபோட்டி உள்ளிட்ட பல நாடுகளில் சீனா துறைமுகங்களை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறித்தும், இந்திய, அமெரிக்க கடற்படைத் தளபதிகள் ஆராய்ந்துள்ளனர்.
இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விப்ட் பின்னர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
கடலில் என்ன பங்கை ஆற்றவுள்ளது என்று இந்தியாவே முடிவு செய்ய வேண்டும் என்றும், ஆனால், இந்தியாவுடன் மேலும் கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.