சிறிலங்கா செல்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர் – தமிழ்க்கட்சிகளைப் புறக்கணிப்பு?
சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 12ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளார்.
வரும் 12ம் நாள் காலை மாலைதீவில் இருந்து கொழும்பு செல்லும் இந்திய வெளிவிவகாரச் செயலர், உடனடியாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுக்களை நடத்துவார்.
அதேவேளை, இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேச தமிழ்க் கட்சிகளும் விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சந்திப்புகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்திய வெளிவிவகாரச் செயலரின் ஒருநாள் பயணம் இறுக்கமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதால், அவசியம் எனக் கருதினால் மட்டும், இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்துக்கான பணிகளை இறுதி செய்வதே இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதேவேளை, சம்பூரில் இந்திய- சிறிலங்கா கூட்டு முயற்சியில் அனல்மின் திட்டத்தை செயற்படுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட இருதரப்பு திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் விடயத்திலும் இந்திய வெளிவிவகாரச் செயலர் கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.