புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய அழைக்கிறார் ரணில்
வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா பொருளாதார மன்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே, ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்தார்.
“எதிர்வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய உறுதிமொழி ஒன்றை நிறைவேற்றுகிறோம்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அனைத்து மக்களுக்கும் அவர்களின் சொந்தக் காணிகள் மீளக் கையளிக்கப்படும். இதன் மூலம் மக்கள் தமது விவசாயக் காணிகளில் பயிர் செய்யும் நிலைமை ஏற்படுத்தப்படும்.
ஜேர்மனி , கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பரந்துபட்டு, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் வடக்கின் அபிவிருத்திக்கு முதலீடுகளை மேற்கொள்ள முடியும். வடக்கில் மட்டுமல்ல, கொழும்பின் அபிவிருத்திக்கும் இவர்களால் பங்களிப்பு செய்ய முடியும்.
புலம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்களும் தமது பங்களிப்பை வழங்க முடியும். பெரும்பாலான புலம்பெயர் சிங்களவர்கள் கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்று வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர்.
இவர்களால் சிறிலங்காவின் கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு பங்களிப்பை வழங்க முடியும்.
எனவே, புலம்பெயர் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தமது தாய்நாட்டிற்கு பங்களிப்பை வழங்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.
சீனாவின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அமெரிக்காவிலும் நெருக்கடிகள் உருவாகலாம்.
எனவே இந்து சமுத்திரத்தின் போட்டிமிக்க சமூகச் சூழலை எமது நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.