கொழும்பில் தூதரகங்கள், விடுதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் விடுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகள் அடிக்கடி வரும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறைமா அதிபர் அனைத்து பிரிவுகளுக்கும், அறிவுறுத்தியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றநிலையினால், வெளிநாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறக் கூடும் என்ற கவலைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரக வளாகங்களை முற்றுகையிடவோ அல்லது கட்டுப்பாட்டை மீறக்கூடிய கொந்தளிப்பான ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ முயற்சிப்பதைத் தடுப்பதில் சிறிலங்கா காவல்துறை கவனம் செலுத்துகிறது.
தூதரக பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு மீறல்கள் ஏற்படாமல் இருக்க பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் நடமாடும் ரோந்துப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலியர்களின் வழிபாட்டு இடங்களான சபாத் மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பொது பாதுகாப்பு அமைச்சு மேற்பார்வையிட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு வழக்கம் போல் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
