அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவையும் மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார்.
கட்சியின் கொள்கைகளை மீறியதாக குற்றம்சாட்டி இவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் உடனடியாக கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் சார்பில், எந்த சட்டரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது என்றும், அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேர்தல்கள் ஆணையாளருக்கும் கடித மூலம் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்றுமாலை குருநாகலவில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், பங்கேற்றிருந்த போதிலும், தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.