மேலும்

மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா?

A.H.M. Fowzieவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பௌசி மட்டும் கையெழுத்திடவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அந்தப் பதவி வழங்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்தக் கடிதத்தில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, அதாவுட செனிவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த, சமல் ராஜபக்ச மற்றும் ஏ.எச்.எம்.பௌசி போன்ற மூத்த தலைவர்களில் ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், தமக்குப் பிரதமர் பதவி தேவையில்லை என்றும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு வருவதை ஆதரிப்பதாகவும், தெரிவித்து,  மைத்திரிபால சிறிசேனவால் பெயர் குறிப்பிடப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு மூத்த தலைவர்களில் ஆறு பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, அதாவுட செனிவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த, சமல் ராஜபக்ச ஆகியோர் ஒப்பமிட்டுள்ள போதிலும், ஏ.எச்.எம்.பௌசி மட்டும் ஒப்பமிடவில்லை.

மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக  சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒப்பமிட்ட கடிதம்

மகிந்தவுக்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒப்பமிட்ட கடிதம்

இவர் ஏற்கனவே தமக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு தெரிவான ஏ.எச்.எம்.பௌசி, இந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், ஏ.எச்.எம்.பௌசிக்கு பிரதமர் பதவியை, சிறிலங்கா அதிபர் வழங்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

தேர்தல் முடிந்த பின்னர், கட்சியின் பொதுச்செயலரே, தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குரியவர்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஏ.எச்.எம்.பௌசி, தேசியப் பட்டியலிலேயே இடம்பெற்றுள்ளதால், மகிந்த ராஜபக்ச ஆதரவாளரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த, அவரை தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்காமல் தடுக்கக் கூடும்.

இதன் காரணமாகவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவை, மைத்திரிபால சிறிசேன நீக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *