நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி மரணம்- உறுதிப்படுத்தியது சிறிலங்கா காவல்துறை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, இந்தியரான கைதி ஒருவரும் உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் 73 வயதான இந்திய நாட்டவர் என்றும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த நேரம் தேவைப்பட்டதால், அவரது மரணம் குறித்த செய்தி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனை தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
1.908 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளை விமானம் மூலம் சிறிலங்காவிற்குள் கொண்டு வந்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் பேரில், அந்த கைதி 2025 ஆம் ஆண்டு முதல் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
உன்னிக்கிருஷ்ணன் என்ற இந்திய கைதி நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் மரணமாகியிருப்பதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்ட பின்னரே, சிறிலங்கா காவல்துறையினர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
