குறுக்குவழியில் கூட்டமைப்பைத் தோற்கடிக்க சதி – ஆயிரக்கணக்கில் சிக்கிய போலி வாக்குச்சீட்டுகள்
நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கடுமையான போட்டி உருவாகியிருக்கின்ற நிலையில், கந்தளாயில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கந்தளாய் மணிக்கூண்டுச் சந்தியில் உள்ள ஐதேக வேட்பாளர் ஒருவரின் செயலகத்தில் இருந்து, 14,986 போலி வாக்குச்சீட்டுகளை சிறிலங்கா காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக ஒருரவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே, இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐதேக கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த மாவட்டத்தில் உள்ள 4 ஆசனங்களில், 2 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐதேகவும் கடுமையாக போட்டியிடுகின்றன.
கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு, இலகுவாக 2 ஆசனங்கள் கிடைப்பது உறுதி என்பதால், பலத்த போட்டி காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே, ஐதேக வேட்பாளரின் செயலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போலி வாக்குச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கான சதித் திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.