சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த வழியின்றி தவிக்கும் சிறிலங்கா தேர்தல் திணைக்களம்
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் காலஎல்லை முடிவுக்கு வந்த பின்னரும், இணையத்தின் வழியாக- சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளைத் தடுக்க வழியின்றி சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
எதிர்வரும் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும்.
ஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளைத் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ருவிட்டர், முகநூல் வழியான பரப்புரைகள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணையவழிப் பரப்புரைகள் வெற்றியைத் தீர்மானிக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்று நம்பவில்லை என்று சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இத்தகைய சமூக ஊடகங்களே, போலியான பரப்புரைகள் மற்றும் கீழ்த்தரமான பரப்புரைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.