கொழும்பு வந்தார் புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் நாள் மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
அவர் சிறிலங்காவுக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எரிக் மேயர்,
“சிறிலங்காவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு கௌரவமாகும். நமது இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடித்தளத்தின் மீது, அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும், நமது பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும், மற்றும் அமெரிக்கர்கள் மற்றும் இலங்கையர்கள் இருவருக்கும் பெரும் செழிப்பை வழங்கும் ஒரு அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் நோர்வேக்கான அமெரிக்கத் தூதரகத்தில் பொறுப்புத் தூதுவராகவும், அதற்கு முன்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தில் மூத்த பணியக அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார்.



