தமிழர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது வட மாகாணம் – சிங்களவர்களை உருவேற்றுகிறார் சங்கநாயக்கர்
யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு வரும் சிங்களவர்கள் தாக்கப்படுகின்றனர். இது தொடருமானால் வடமாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சிங்கள பௌத்தவர்களுக்கு இனவெறியூட்டியிருக்கிறார் வடமாகாண சங்க நாயக்கர் வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர்.
கொழும்பு விகாரமாதேவி உள்ளக அரங்கில் நேற்று, 61 சிங்கள பௌத்த அமைப்புகளுடன், மகிந்த ராஜபக்ச உடன்பாடு செய்து கொண்ட நிகழ்வில் உரையாற்றிய போதே, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியும், வடமாகாண சங்கநாயக்கருமான, வண. நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையில், “அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட கூட்டமேடை பிரிக்கப்பட்டு, இலங்கை ஈழ வரைபடம் வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் நின்றே, ரணில் உரையாற்றினார்.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இந்த வடிவிலேயே ஈழ முத்திரையை வெளியிட்டிருந்தனர். இந்த மேடையில் விஜயகலா மகேஸ்வரனும் அமர்ந்திருந்தார்.
ஐதேகட்சி ஆட்சி உருவான பின்னர் வடக்கில் அனைத்து காவல்நிலையங்களும் மூடப்பட்டு வடக்கிலிருந்து காவல்துறையினர் வெளியேற்றப்படுவார்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது இக்கருத்து பிரிவினையை ஏற்படுத்தும், பயங்கரமான கருத்து.
யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை மோசமாக மாறியுள்ளது. தெற்கிலிருந்து வரும் சிங்கள யாத்திரிகர்கள் தாக்கப்படுகிறார்கள். விஜயகலா மகேஸ்வரன் மிரட்டுகிறார்.
இது தொடருமானால் வட மாகாணம் தமிழர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடும்.
எனவே எதிர்வரும் 17ஆம் நாள் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து, சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப வாக்களித்து, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும்.
இங்கு நான் இவ்வாறு பேசிவிட்டு யாழ்ப்பாணம் செல்ல முடியுமோ என்ற நிலையுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.