சிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி
சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தில் 37 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேரும், காலி மாவட்டத்தில் 11 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 4 பேரும் உள்ளிட்ட91 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 91 பேர் உயிரிழந்ததாகவும் 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் 38 பேர் உயிரிழந்தனர்.
சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களில், 7856 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி மாவட்டத்தில் 7157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால், கேகாலை, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களில் சிறிலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன மீட்பு உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உலங்குவானூர்தி மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, விமானப்படையைச் சேர்ந்த ஒருவரும், இரண்டு பொதுமக்களும், கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் கனமழை எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள். உதவிப் பணிகளை பார்வையிடுவதற்காக, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு பிற்பகல் 2 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.