திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்
திருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர்,
“திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைப்பது குறித்து, இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு உடன்பாடு ஒன்று இரகசியமாக கையெழுத்திடப்பட்டிருக்கிறது.
எதிர்காலத்தில் திருகோணமலையில் கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து 400 மில்லியன் டொலர் செலவில் போர் விமானங்களையும் 300 மில்லியன் டொலர் இராணுவ தளபாடங்களையும் சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லாத இந்தச் சூழலில் எதற்காக போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டும்? பொதுமக்களின் நிதியை எதற்காக வீணாகச் செலவழிக்க வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.