நீதிவான் எச்சரிக்கையால் ஆடிப்போட சிறிலங்கா இராணுவ தளபதி – கிரித்தல புலனாய்வு முகாமுக்கு ‘சீல்’
ஹோமகம நீதிவானின் எச்சரிக்கையை அடுத்து, கிரித்தல இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமை, ‘சீல்’ வைத்து மூட சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து. நேற்றுக்காலை கிரித்தலவில் உள்ள 3ஆவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு முகாம் ‘சீல்’ வைத்து மூடப்பட்டதுடன், அதனை இராணுவக் காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் ஹோமகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தரவில்லை என்று அரசசட்டவாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்ய முடியும் என்றும், அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 185ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிவான் எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, கிரித்தல இராணுவ முகாமை மூடி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, விசாரணைகளுக்கு உதவும் வகையில், இந்த இராணுவ முகாம் சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமையக சட்டப்பிரிவின் சிறப்புக் குழுவொன்று, விசாரணைகளுக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிரித்தலஇராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றிய அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரிடமும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
அதேவேளை கிரித்தல இராணுவ முகாமின் சில பணியகங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.