கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்
இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.
சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலைதீவு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் அங்கிருந்து இன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
அவருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் மூன்று உயர் அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிவிவகாரச் செயலர் உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அடுத்த மாத முற்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பங்கேற்கவுள்ள, இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே, இந்திய வெளிவிவகாரச் செயலரின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.