மேலும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு

susil-premajayanthaபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழித்தல், விருப்பு வாக்கு முறையை நீக்கி நியாயமான பிரதிநிதித்துவ தேர்தல் முறையை உறுதி செய்தல், தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வொன்றை வழங்கக்கூடிய வகையிலும், நல்லிணக்கத்தை மேம்படுத்தக் கூடிய வகையிலும் புதிய அரசியலமைப்புத் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை நீக்க வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி திருத்தங்களை முன்வைத்தது.

இந்தத் திருத்தங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் இந்தத் திருத்தங்களுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி நீக்கக் கோருகின்ற விடயங்களே, இந்த பிரேரணையின் அடிப்படையான அம்சங்கள் என்றும், இவற்றுக்கு இணங்கியே பிரேரணைக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

இவற்றை நீக்குவது பிரேரணையின் அடிப்படையை நீக்குவதாக அமைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது, தமது கட்சியின் நிலைப்பாட்டை தாம் முன்வைத்திருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, இந்தத் திருத்தம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய தீர்மானம் என்றும், இது குறித்து பேச்சு நடத்தி முடிவுக்கு வரலாம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *