மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

Chrisanthe de Silvaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் இந்த வழக்கில் முன்னிலையான மூத்த அரசசட்டவாளர் திலீப் பீரிஸ் செய்த முறைப்பாட்டையடுத்தே, ஹோமகம நீதிமன்ற நீதிவான் ரங்க திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும், விசாரணையுடன் தொடர்புடைய நிர்வாக சான்றுகளை இன்னும் சட்டவாளர்களுக்கு வழங்கவில்லை என்றும், அரசதரப்பு சட்டவாளர் குற்றம்சாட்டினார்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் இந்த ஆவணங்களைப் பெறுவதற்கு சட்டவாளர்கள் முயற்சி செய்த போதிலும், இன்னமும் அவை வழங்கப்படவில்லை என்றும், கோரப்பட்ட ஆவணங்கள் தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய புலனாய்வுடன் தொடர்புடையவை அல்ல என்றும், இராணுவ நிர்வாகத்துடன் தொடர்புடையவையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால், விசாரணைகள் தேக்கமடைந்துள்ளதாகவும் அரசசட்டவாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் சிறிலங்கா இராணுவத்தின் தரப்பில் முன்னிலையான சட்ட அதிகாரி, விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் ஒத்துழைப்பதாகவும்,  முக்கியமான ஆவணங்களை கடந்த சனிக்கிழமை சிறிலங்கா இராணுவம் ஒப்படைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட நீதிவான், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு, விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், இராணுவத் தளபதியைக் கைது செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 185ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *