சிறிலங்காவின் பாதீட்டு பற்றாக்குறை அதிகரிப்பு – கையிருப்பும் கரைகிறது
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிறிலங்கா அரசாங்கம், சுமார் 500 பில்லியன் ரூபா பாதீட்டுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, காலாண்டில் நாட்டின் நிதி செயல்திறன் குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கம்1,064.66 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ளது.
அதேவேளை, 1,562.94 பில்லியன் ரூபா செலவினங்கள் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், 498.28 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிதித் திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானத்தில் பெரும் பகுதியான, 970.58 பில்லியன் ரூபா, வரிகள் மூலம் பெறப்பட்டுள்ளது.
அதேவேளை, செலவினத்தில் ஆதிக்கம் செலுத்தும் மீண்டெழும் செலவினமாக 1,226.55 பில்லியன் ரூபா காணப்படுகிறது.
அதேவேளை, சிறிலங்காவின் அதிகாரபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் மாதத்தில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம், கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 6.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது ஏப்ரல் மாதம் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்து, 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.