மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்தது சிறிலங்காவின் பெல் உலங்குவானூர்தி
சிறிலங்கா விமானப்படையின் பெல் -212 உலங்குவானூர்தி ஒன்று மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்றுகாலை, ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் விசேட படைப்பிரிவினருடன் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் 7வது உலங்குவானூர்தி அணியைச் சேர்ந்த இந்த உலங்குவானூர்தி விபத்துக்குள்ளான போது, சிறிலங்கா இராணுவ விசேட படைப்பிரிவினர் 10 பேரும், இரண்டு விமானிகளும், அதில் பயணம் செய்திருந்தனர்.
அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் விசேட படைப்பிரிவின் அணியொன்று பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.