மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட ரெலோ முயற்சி
வடக்கு, கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள பணியகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் வடக்கு, கிழக்கில் எமக்கு ஆணை தந்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக செயற்படவில்லை என்றால், இந்த மக்கள் ஆணையை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற செய்தியை கூறியுள்ளனர்.
தமிழர்களை தமிழர்கள் ஆளக்கூடிய வகையில் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற செய்தியையும் மக்கள் கூறியுள்ளனர்.
ரெலோவைப் பொறுத்தவகையில் அடுத்து வருகின்ற தேர்தல்களிலோ, போராட்டங்களிலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் செயற்படக் கூடிய வகையிலான முயற்சியை நாம் முன்னெடுக்கிறோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலையில், தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம்.
தமிழ் அரசுக் கட்சியுடனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புடனும், நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் தேசிய கட்சிகளுடனேயே ஆட்சியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
எதிர்வரும் காலங்களில் ஒற்றுமையாக ஒரே அணியாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்.
மக்களின் ஆணையை உணர்ந்தவர்களாக நாங்கள் செயற்பட வேண்டும்“ என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.