சென்னையில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் தேடுதல்
சென்னையில் இருந்து வந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரின், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் அந்த விமானத்தில் பயணித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து எச்சரிக்கை கிடைத்ததை சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனால் சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் UL 122 விமானம் இன்று முற்பகல் 11:59 மணியளவில், கொழும்பில் தரையிறங்கியதும், விரிவான சோதனை நடத்தப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு சந்தேக நபர் குறித்து சென்னை கட்டுப்பாட்டு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
நீண்ட சோதனைக்குப் பின்னர், விமானம் விடுவிக்கப்பட்டதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த பாதுகாப்பு நடைமுறைகளால், சிங்கப்பூருக்குச் செல்லும் அடுத்த விமானமான UL 308, தாமதமாகியதாகவும் சிறிலங்கன் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, விமானத்தில் இருந்த எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.