சிறிலங்கா நடுநிலை வகிக்க வேண்டும் – எதிர்பார்க்கும் பாகிஸ்தான்
பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து, வரும் நிலையில் சிறிலங்கா நடுநிலையான, அணிசேரா கொள்கைளை பின்பற்ற வேண்டும் என, பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதைத் தொடர்ந்து, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின் வாசகங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர் என்றும் அந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
2025 மார்ச் 11 ஆம் திகதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சிபி நகருக்கு அருகில், ஜாபர் விரைவுத் தொடருந்தை பலுச் பிரிவினைவாதிகள் கடத்திய சம்பவத்தைக் கண்டித்து, சிறிலங்கா ஜனாதிபதி ஏன் நடுநிலைமையைக் காட்டவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை மன்னிக்கவில்லை என்று வலியுறுத்திய அந்த வட்டாரம், பஹல்காமில் என்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சிந்து நதி நீர் விவசாயத்திற்காக நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்றும், அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுமையான போர் ஏற்பட்டால், அது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்த இராஜதந்திர வட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.