மேலும்

பொறுப்பை ஒப்படைத்து விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த 17ஆம் நாளுடன் ஓய்வுபெற்ற சிறிலங்காவின் 22 ஆவது இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

இராணுவத் தளபதி நியமனத்தில் இழுபறிகள் காணப்பட்டதால், நேற்றுக்காலையே அவருக்கான பிரியாவிடை அளிக்கும் நிகழ்வும், பொறுப்புகளைக் கைமாற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

இராணுவ மரபுகளுக்கேற்ப, பொறுப்பைக் கைமாற்றும் அடையாளமாக, ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிடம் இருந்து, புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதிக்குரிய பிரம்பைப் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, மூத்த இராணுவ அதிகாரிகள், மற்றும் தலைமையக அதிகாரிகளிடம் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க விடைபெற்றார்.

அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, வழி அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *