சவேந்திர சில்வா நியமனம் – ஐரோப்பிய ஒன்றியமும் கவலை
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இந்த நியமனம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அளித்த வாக்குறுதியை கேள்விக்குட்படுத்துகிறது.
மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இருந்த போதும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா .இராணுவத் தளபதியாக நியமிப்பட்டது குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட தீவிரமான கவலைகளை நாங்கள் முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறோம்.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.