மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றத்தை நாடினார் சிறிலங்கா அதிபர்
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார்.
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக, எதிர்வரும் 23ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆராயவுள்ளதாக அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் இருந்த, விகிதாசார பிரதிநிதித்துவ முறையில், மாகாண சபை தேர்தல்களை நடத்த முடியுமா என்று, அறிவிக்குமாறு, சிறிலங்கா அதிபர் உச்சநீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இந்தக் கோரிக்கை தொடர்பாக, சட்டவாளர்களுக்கு அறிவிக்குமாறு, உச்சநீதிமன்ற பதிவாளர் சட்டவாளர்கள் சங்கத் தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து, உச்சநீதிமன்றம் தனது கருத்தை ஓகஸ்ட் 30 ஆம் நாளுக்கு முன்னர் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நொவம்பர் மாதம் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.